Thursday, November 27, 2008

சிறுவம்


பதுங்கு குழிக்குள் (INSIDE the bunker);
வன்னி; ஈழம்..

"சிறைப்பட்டிருத்தல்"

ரவில சின்னச் சத்தங் கேட்டாலும் நெஞ்சு விறைக்கத் தொடங்கியிடும். இப்ப இருக்கிற நிலமையில பயப்பிடாமலுக்கு இருக்கேலுமே? என்னவும் நடக்கலாம்.ஆர்கேக்கிறது? ஒவ்வொரு கட்டத்திலயும் தப்பி வந்து கடைசியா ஏதோ ஒரு கட்டத்துக்குள்ள சிக்கி சீரழிஞ்சிடுவனோ? ஆருக்குத் தெரியும். எந்தப்பக்கம் திரும்பினாலும் தடுப்புகள். அந்தத் தடுப்புகளுக் குள்ளாலதான் திரிய விதிக்கப்பட்டவளாக நான்! எவனின்ரை பார்வையும் பிடிச்சு விழுங்கிற மாதிரித்தான் இருக்கு. அம்மா கொஞ்சம் பெருமைப் பட்டுத்தான் சொல்லுவ "எண்பத்தேழாமா ண்டில சனமெல்லாம் இடம் பெயர நானும் பிள்ளையும் தனிச்சிருந்த னாங்கள். அவங்களால எந்தக்கரச்சலுமில்ல. அவங்கள் தங்கடபாடு நாங்க எங்கடபாடு' அம்மா இஞ்சவாணை! அப்ப உன்ர பிள்ளைக்கு என்ன வயது? ஆறுவயதும் முடியேல்ல. சின்னப் பெட்டை. பெரிசாத் தோற்றமில்ல. இப்ப உன்ர பிள்ளைக்கு என்னவயது? இருபத்தைஞ்சு நடக்குது. பாக்கிற சனமெல்லாம் உன்ர மகள் ஒரு வாகனம் மாதிரி வந்திட்டாள் என்கினம்- மற்றது அப்ப இருந்த அவங்கள் மாதிரி இல்ல இப்ப இருக்கிற இவங்கள் - பாக்கிற பார்வையிலயே பிடிச்சுத் திண்டுடுவாங்கள் போல இருக்கு. வெயிலேறத் தொடங்கினோன்ன பூவரசுகளில இருந்து இறங்கி ஊர்ந்து திரியிற மசுக்குட்டியள் கணக்காக இப்ப எங்க பாத்தாலும் இவங்கள்தான். இவங்களின்ர பார்வையில இருந்து தப்பேலுமே?.. 'ஒரு நாளைக்கு முறையா அகப்பிடு அப்ப பாரன் என்ன நடக்குமெண்டு' எண்டு சொல்லுற மாதிரியிருக்கு இவங்களின்ரை பார்வையள்.

இவங்களைக் கடந்து சைக்கிளில போகேக்க நெஞ்சு பக்பக்கெண்டிருக்கும். ஏதாவது காது கூசிற மாதிரி என்ர அவையவங்களைக் குறிச்சுக் கொச்சைத் தனமாச் சொல்லுறதையே வழக்கமாக வச்சிருக்கிறாங்கள். நான் செவிடு மாதிரி குனிஞ்சதலை நிமிராமல் போக வேண்டியதுதான். இதைத்தவிர பாதுகாப்பான வேற வழியேதும் இருக்கோ?! அப்பா, அண்ணா எண்டு ஆரிட்டையும் சொல்லேலுமே? சொன்னாலும் அவையென்ன செய்யிறது? இவங்கட கையில படைக்கலங்கள் இருக்கு எதுகும் செய்வாங்கள். அதால என்னநடந்தாலும் பேசாமல் பறையாமல் குனிஞ்ச தலை நிமிராமல் திரிய வேண்டியதுதான். கெம்பஸ்பெட்டையள் எண்டால் இவங்கள் வித்தியாச மாத்தான் பாப்பாங்கள், ஏதோ நாங்கள் வெடி பொருட்களை கொண்டு திரியிறம் என்கிற மாதிரி. லெக்சர்சுக்கு றூமிலயிருந்து வெளிக்கிட்டு தனியாப் போறத நினைச்சால்பயமாயிருக்கு. நானும் சசியும் இருக்கிற றூமில இருந்து கூப்பிடு தூரம்தான் இவங்கடை முகாமிருக்கு. எப்பிடியும் அதைத்தாண்டித் தான் போகவேண்டியிருக்கு. உட்பாதையளெண்டு எதுகுமில்ல. நானும் சசியும் சேர்ந்துதான் லெக்ர்சுக்குப் போறம். நாங்கள் போகேக்க அவங்கள் காத்து நிண்டு சீக்காயடிப்பாங்கள். அல்லாட்டி ஏதும் காது கூசுகிற மாதிரி நொட்டை சொல்லுறாங்கள். நாங்கள் குனிஞ்சதலை நிமிராமல்தான் போய்வாறம். சசி றூமில நிக்காத நாள்ள நான் லெக்சர்சுக்குப் போகன். ஏதோ நடக்கக் கூடாதது நடக்கப் போகுதெண்டு உள்மனம் சொல்லுது. இப்ப பலாலி ரோட்டால சைக்கிள்ள போகேக்க ஒரு மயானத்துக் குள்ளால போற மாதிரிக் கிடக்கு. முந்தியெண்டா ரோட் கலகலப்பாயிருக்கும் எத்தினை வாகனம் போய்வரும். புதிசு புதிசாய் கடையள் திறந்து இரவு பகலாய் ஓயாமல் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும். இப்பபாத்தால் எல்லாக் கடையளும்; அநேகமாப் பூட்டியிருக்கு, ஒண்டுரண்டு சைக்கிள் திருத்திற கடையளத் தவிர. இவங்கட வாகனங்கள் தான் வலுவேகமாய்ப் போய்வருகுது.

இப்ப கொஞ்ச நாளா ஒருவழமை என்னெண்டா இவங்கட வாகனத் தொடரணி போய்வாறதுக்காக ரோட்டில சனங்களை மறிச்சு வைக்கிறது. மத்தியானம் பன்னிரண்டு மணிக்கும் பின்னேரம் நாலு மணிக்கும் ரோட்டில அடிக்கொருத்தனா நிக்கிறவங்களில ஒருத்தன் விசில்ஊதுவான். அதுக்குப்பிறகு ஆரும் அசையேலாது நிண்ட இடத்தில நிக்க வேண்டியது தான். சிலநேரம் ஒரு மணித்தியாலத்திற்கு மேல நிற்கவேண்டி வரும். இவங்கட வாகனத்தொடரணி போய் முடிஞ்சாப் போலதான் சனம் போகலாம். இதனால நானும் சசியும் கன லெக்சேர்ஸைத் தவற விட்டிருப்பம். என்ன செய்யிறது? எது நடந்தாலும் பேசாமலிருக்க வேண்டியது தான். லெக்சேர்சும் முந்தின மாதிரி கலகலப்பாயில்ல. ஏதோ செத்தவீட்டுக்கு துக்கம் விசாரிக்கப்போய்வாற மாதிரியிருக்கு.லெக்சரர்மார் தொடக்கம் பொடியள் பெட்டயள், எண்டு எல்லாரின்ர முகங்களும் இறுகிப் போய் ஒருத்தரோட ஒருத்தர் கதைக்கவும் பயந்து..... இப்படியே காலங் கழியுது. சிலநேரம் சசி வடமராட்சியில இருக்கிற தன்ர வீட்டுக்குப் போகிடுவாள். றூமில நான் தான் தனியா இருக்க வேண்டி வரும். வீட்டுக்கார அன்ரி இருக்கிறாதான். அவ வேளைக்கு லைட்டை நூத்திட்டுப் படுத்திடுவா. படுக்கிறதுக்கு முதல் ஒருக்கா றூமை எட்டிப் பாத்து 'பிள்ளை கெதியாலைற் ஓவ் பண்ணிப் போட்டுப் படும். படிக்கிறதெண்டா காலமை எழும்பிப் படியும் நான் படுக்கப் போறன்'எண்டிட்டுப் போகிடுவா. மனுசி படுத்ததுதான் தாமதம் குறட்டைவிடத்தொடங்கியிடும். அன்ரிக்கென்ன கவலை. வயதும் அறுபதைத் தாண்டியிடுத்து. பிள்ளையள்
மூண்டும் வெளிநாட்டில. புருஷன்காரன்ர பென்சனும் கிடைக்குது. அதுக்குள்ள எங்கட வாடைக்காசும். அவ படுத்தோண்ண குறட்டை விடுகிறதுக்கு என்ன குறை? இது நான் தனிய றூமுக்குள்ள முடங்கின படியே யன்னலையும் கதவையும் பூட்டியிட்டு இருள் விழுங்கின அறைக்குள்ள புழுங்கி அவிய கண்ணோடு கண் மூடாமல் பயந்து செத்தொண்டிருப்பன். வெளியில ஆரோ கனபேர் நடமாடுற மாதிரி இருக்கும். நாயள் வலு மோசமாக் குலைக்கும்.

முத்தத்துப் பிலா உதிர்க்கிற சருகுகள் நொருங்கிற மாதிரியும் சத்தம் கேட்கும். இண்டைக்கு நான் துலையப் போறன் எண்டு நினைப்பன். என்ன நடந்தாலும் ஆருக்கும் தெரியாது. கதவு தட்டுற சத்தம் ஏதும் கேட்குதோ எண்டு காதைத் தீட்டிக்கொண்டு நெஞ்சுக்குள் தண்ணி இல்லாமல் உடல் விறைக்க அங்கால இங்கால அசையவும் பயந்து மல்லாந்து கிடப்பன். இரவு எனக்குப் பாதகமாக நீண்டு கொண்டிருக்கும். வெளியில கேட்கிற சின்னச் சத்தமும் பீதியைக் கிளப்பும். பிலாமரத்தால ஏறி ஓட்டில நடந்து திரிய பூனை, ரீய்ய்ய் எண்ட சத்தத்தோட தொடர்ந்திரைய நிலக்கறையான். எங்கையோ இருந்து தேக்கம் பழங்களைக் கவ்விக் கொணந்து ஓட்டுக்கு மேல விழுத்தியிட்டு படக் படக் கெண்டு செட்டையடிச்சொண்டு போற வெளவால் - கிடக்கிறதுக்கிதமா முத்தத்து மண்ணை வறுகிற அன்ரியின் செல்லப் பிராணி 'ரொமி' நாய் - எல்லாம் எளிய மூதேசியள். திட்டம் போட்டுத் தாக்கிற விரோதியளப் போல இருள் விழுங்கியிருக்கிற இரவின்ர கனத்தைக் கூட்டி என்னை வெருட்டி சாக்காட்டிக் கொண்டிருக்குங்கள்.

ஒரு கோழித் தூக்கம் மாதிரித்தான் என்ர நித்திரை. இடையில் கெட்ட கனாக்களும் வரும். கண்முழிச்சா நான் ஆஸ்பத்திரி பிரேத அறைக்குள்ள கிடக்கிற மாதிரி இருக்கும். நெஞ்சு வேகமா அடிச்சுக் கொண்டிருக்கும். போதாக் குறைக்கு அன்ரி விடுற குறட்டைச் சத்தம் இன்னும் பயத்தைக் கிளப்பும். றோட்டில வாகனங்கள் இரையிற சத்தம் கேட்கும். என்ர உடம்பு தன்பாட்டில விறைக்கத் தொடங்கிவிடும். பிறகு பாத்தா வாகனங்கள் வீட்டை நோக்கி வாறமாதிரியிருக்கும். இனியென்ன அவங்கள் வந்து கதவைத் தட்டப்போறாங்கள். ஐசியைப்பாத்திட்டு 'நீ வன்னியில இருந்தா வந்தனி? உன்னில எங்களுக்கு சந்தேகம் வலுக்குது. உன்னை விசாரிக்கோணும். கெதியா வா!.' என்பாங்கள். போகவேண்டியது தான். நடந்தது ஆருக்குத் தெரியும். நான் துலைஞ்சு போகிடுவன். பிறகு பேப்பரில நியூஸ் வரும். என்னைக் காணேல்லையெண்டு.

வரிக்கு வரி கடிதத்தில பிள்ளை கவனம்! பிள்ளைகவனம் எண்டு எழுதுற அம்மா தவிச்சுப் போவா!. எதுக்கும் அன்ரியை எழுப்புவமோ? அப்பிடி நினைச்சாலும் தொண்டைக்குள்ளால சத்தம் வெளிக்கிடாது. இப்பிடியே கிடந்து துலைய வேண்டியதுதான். எடியே! சசி!. உனக்கினி வைதேகி எண்டொரு சிநேகிதி இல்லையடி. அவள் துலையப்போறாள். நடக்கப் போற அசம்பாவிதம் உனக்குத் தெரியாது. நீ உன்ரை அம்மாவோட நிம்மதியா உறங்கிக்கொண்டிருக்கிறாய்!. எனக்கு முடிவு நெருங்கிக் கொண்டிருக்கு. நான் தனிச்சுப்போய் ஒடுங்குகிற இரவுகளில இப்பிடித்தான் எப்பவும் தவிர்க்கேலாமல் செத்துக் கொண்டிருக்கிறன்.பகல் தொடங்கினால் எந்தக் கணத்தில என்னநடக்குமோ? எண்டு மனந்தவிக்கத் தொடங்கியிடும். எல்லாம் உலரத் தொடங்கியிடும். வெக்கை தோலைக் கருக்கத் தொடங்கும். ஒரு சொட்டு மழை வந்து இந்த இறுக்கத்தைக் குலைக்காதா? எண்டு மனம் ஏங்கும். மழை வாறதுக்கான எந்த அறிகுறியும் தென்படாமலிருக்கு. ஹர்த்தால், கடையடைப்பு நாள்களில பகல் முழுக்க றூமுக்குள்ளதான் ஒடுங்கவேண்டியிருக்கும்.

உடம்பெல்லாம் வேர்த்தொழுக வெறுந்தரையில மல்லாந்து கிடக்க வேண்டியது தான். எதும் நோட்சை எடத்துப் படிக்கிறதும் ஏலாது. மனதில எப்பிடிப்பதியும்? கண்கள் எழுத்துகளில தாவிக் கொண்டிருக்க மனதில பயந்தருகிற காட்சியள் ஓடிக்கொண்டிருக்கும். முகத்தைக் கறுப்புத் துணியால மறைச்சுக்கட்டிக்கொண்டு நிற்கிற அவங்கட உருவங்கள் அடிக்கடி வரும். வெறிபிடிச்சு அலையிற நாயளாக அவங்கள் சனத்தை வெட்டியும், சுட்டும் கருக்கிக் கொண்டிருப்பாங்கள். சனங்கள் எல்லாம் அவங்களால் அடிச்சு நொருக்கப் படவும், சட்டுக்கொல்லப்படவும் பிறந்ததுகள் மாதிரி தலையைக் குனிஞ்சு கொண்டு நிக்குங்கள். கொஞ்ச நாளைக்கு முன்னம் மதியந் திரும்பினாப் போல நானும் சசியும் லெக்சர்ஸ் முடிஞ்சு வாறம். அண்டைக்கு ஒரு அசம்பாவிதம் நடந்து அவங்களில இரண்டு பேர்செத்திட்டாங்கள். பலாலிறோட்டால வந்த ஒருபஸ்சை மறிச்சு இளந்தாரியள இறக்கி கேபிள் வயறுகளாலையும், துவக்குச் சோங்குகளாலையும் நாலைஞ்சுபேர் வெறிபிடிச்ச நாயள்மாதிரி மாறிமாறி அடிச்சுத் துவைச்சுக் கொண்டிருந்தாங்கள். அப்பதான் நான் முதல் முதலா அவங்கள் அடிச்சுத் துவைக்கிறதைப் பாத்திருக்கிறன்.

இப்படித்தான் என்னையும்சசியையும் போல பெட்டையள் தனியப் போய் அகப்பட்டால் சட்டையளக் கீலங் கீலமாக் கிழிச்சு வாயால சொல்லேலாத வேலையள் எல்லாம் செய்வாங்கள் எண்டு நினைச்சோண்ண எனக்கெண்டால் தலை விறைக்கத் தொடங்கியிடுத்து. ஒருமாதிரி தப்பித்தவறி றூமுக்கு வந்து சேந்தாப் போலயும் எனக்கு உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அண்டைக்கு இராமுழுக்க அவங்களட்ட நானும் சசியும் இன்னும் சில பெட்டையளும் தனிய அகப்படுறதும் அவுங்கள் எங்களைக் குழறக்குழற இழுத்தொண்டு போய் சட்டையளக் கிழிச்செறிஞ்சிட்டு சின்னா பின்னப்படுத்திறதுமா ஏதோ கனவெல்லாம் வந்து நான் படுக்கையில குழறியிட்டன். அடுத்த நாள் 'சசி என்னடி இரவிரவாகக் கத்திக் கொண்டிருந்தாய்' எண்டு விழுந்து விழுந்து சிரிச்சாள். எனக்குஉண்மையில கோபந்தான் வந்தது. 'பேய்ச்சி' இன்னும் நிலமை விளங்காமல் செல்லங்கொட்டுறாள் என்டு.

இவள மாதிரித்தான் இங்கை கனபெட்டையளுக்கு நிலமை விளங்கிறதில்ல. நாளுக்கு நாள் நிலமை மோசமாகிக்கொண்டு வருது. இனிமேல் பெண்ணாப் பிறந்தனாங்கள் என்ன செய்யப்போறம்? எண்ட அச்சத்துக்குரிய பெரிய கேள்வியொண்டிருக்கு. ஆரிட்டையும் இந்தக் கேள்விக்கு விடையில்லை. திறந்த வெளியில திரியிற செம்மறியாடுகள் மாதிரித்தான் எங்கடை நிலை. ஆரும் குளிருக்குபோர்க்க எங்கடை மயிரைக்கத் திரிக்கலாம். அல்லாட்டில் இறைச்சிக்காக எங்களைக் கொல்லலாம். நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமலுக்குத் தலையைக் குனிஞ்சுகொண்டு திரிவம். அவ்வளவுதான். நான்அடிக்கடி நினைப்பன் இந்த கம்பஸ் படிப்பைவிட்டுட்டு ஊரில போய் இருப்பமெண்டு. பிறகுமூண்டு வருசமாக் கனக்கக் காசுசெலவழிச்சாச்சு. இன்னும் ஒருவருசங் கிடக்கு .பல்கலைக்கடிச்சொண்டு பேசாமல் இருப்பம் எண்ட முடிவுக்குத் தான் வாறன். என்னசெய்யிறது. எங்கை சண்டை தொடங்கினாலும் எங்களைப் போல பொம்பிளையளுக்குத் தான்ஆபத்து காத்திருக்கும். ஆக்கிரமிக்கிறவங்களின்ர மிருகத்தனமான உணர்ச்சிகளுக்கு இரையாகிற தெல்லாம் நாங்கள் தான். அவங்கள மாமிசத்தை நுகர்ந்த நாயள் கணக்காக அலைஞ்சு திரிவாங்கள். எப்ப சந்தர்ப்பம் வாய்க்குதோ அப்ப கடிச்சுக் குதறிப் போட்டுப் போவாங்கள்.

பேப்பருகளில பெரிசாச் செய்தியள் வரும். பலர் கண்டனம் தெருவிப்பினம். மருத்துவ அறிக்கையைப் பலரும் ஆவலோட எதிர்பாத்திருப்பினம். பாலுறுப்புகளில் நிகக்கீறலும் கடிகாயமும் அவதானிக்கப்பட்டிருக்கிறதா அறிக்கை வெளியாகும். வழக்குப்பதிவு நடந்து விசாரணையள் தொடங்கும். சாட்சியங்கள்பொதுவாக இருக்காது. 'சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கப்படும்' எண்டொரு கூற்று வெளியாகும்.கொஞ்ச நாளைக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காது. பிறகு அவங்கள் பழையபடி தங்கட வேலையளத் தொடங்கியிருப்பாங்கள் காலப்போக்கில அறிக்கை வெளியிட விரும்புகிறசிலர் எழுதுவினம் 'ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில இப்படி நடக்கத்தான் செய்யும்.

கொங்கோவைப் பாருங்கோ, ஈராக்கைப்பாருங்கோ, இதெல்லாம் தவிர்க்கேலாது' எண்டுகனக்க ஆதாரங்கள் காட்டி விளக்குவினம். இதெல்லாத்தையும் நாங்கள் வாசிச்சுக் கொண்டுசெம்மறி யாடுகளாகத் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு திரியவேண்டியதுதான். என்னைப் போல பெட்டையளில அக்கறையுள்ள ஒரு கடவுள் இருந்தால் அவர் கனவிலயெண்டாலும் வரோணும். வந்தால் நான்கேட்கிற வரம் இதுதான். எங்களுக்கு மேல் உண்மையில அக்கறையுள்ள கடவுளா நீர் இருந்தால் எங்களை உடன கிழவியாக்கிவிடும். இல்லாட்டில் பால்குடிக்குழந்தையள் ஆக்கிவிடும். உம்மில நாங்கள் விசுவாசமானவர்களாக இருப்பம். இதுகும் முடியாட்டில் எங்களைக் கல்லாக்கி விடும் அல்லது சாக்காட்டிவிடும். உமக்குப் புண்ணியங் கிடைக்கும். நாங்கள் நிம்மதியில்லாமல் எவ்வளவு காலத்துக்கு செத்துக்கொண்டிருக்கிறது? கடவுளே கருணைகாட்டும்.'

  • கார்த்திகா பாலசுந்தரம் (கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் ) ஞானம் - டிசம்பர் 2006: நவம்பர் 2008, நன்றி: ஊடறு