Friday, June 1, 2007

அன்பு மிகுந்தவர்கள் அவர்களே

வெறுப்பு அன்பு
அது நிதானமாக வெளிப்படுகிறது,
மிக நிதானமாக.
மிக
மிக நிதானமாக.
இனவெறி அரசின் தலைவன்
அந்த நிதானத்துடன் "உண்மை"யை
சொல்லத் தொடங்கிறபோது
உண்மை நடுங்குகிறது
(அப்படித்தான், அப்படியொன்று
இல்லாமலும் போகிறது)
கீழே தட்டித் தட்டிப் போட்டு
எழுதிடும் இக் குறிப்பு ஒன்றினால்
கொலையிசையை ஒழிக்க முடியாது

அன்பு வெறுப்பு
கோபமாயே வெளிப்படுகிறது
மிக வேகமாக
மிக,
மிக வேகமாக -
ஏனெனில் புறப்பட்டு வரும்
குண்டுவீசிச் சிதற முன்
அது வெளிப்பட்டாக வேண்டும்.

ஆனால்
சிதறிய தசையில்
உயிரான அன்பின் வாசத்தை விட்டுச் செல்லா(த)
தம் தோழரை
நினைவித்து நினைவித்து
பிறழ்ந்து, அழிக்க
ஆயுதந் தூக்கிய பிறகு -
தன் காரணங்களைக் கூறுறபோது
- ஆற்றாமை விசும்பி அழுகிற
ஒரு குழந்தைபோல -
வெடிக்கும் கோபமும் அழுகையும்
வாயிருந்து பறக்கிற எச்சிலும்
பிணங்களின் இடையே
குருதி நெடியில்
நிணத்தின் வெடுக்கில்
மனுச ஓலங்களாகின்றன
ஐயோ மகளே
என்ர புத்தா

ஆனால்
எண்ணற்ற ஒப்பாரிகள் "அவர்களை" எதும் செய்வதில்லை:
ஒரே சத்தம்! தவிர
அன்பென்ற ஒன்று அவற்றில் இருப்பதேயில்லை
தொடர்ச்சியாய் தன் மகவுகளை இழந்த
அப்பாவின் மெளனம் அவற்றின் மீதாக
ஒன்றும் சொல்வதில்லை
ஏனெனில் என்றென்றைக்குமான மெளனம்
அத் தொண்டைகளை அடைத்துக் 'கொன்று'விட்டது
அவர்களின் வெளுப்பு அச்சுத் தாள்களில்
கறுப்பு எழுத்தில்
வெறுப்பு அது
"அன்பு" என்றே எழுதப்படுகிறது -
அவர்களது மனித அபிமானமும்
ஒருவரை ஒருவர் எதிரியாய்
கிழப்பி விடுவதில் மட்டுமே.
3 இஸ்ரவேலர்களுக்கு
80 பாலஸ்தீனியர்கள் விழுதல் நியாயம்!

எனினும்,
அன்பு மிகுந்தவர்கள் அவர்களே
ஏனெனில்
எப்போதும்
"அன்பு"மிகுந்தவர்கள் அவர்களே
மேலும்
அன்பு மிகுந்தவர்கள்
அவர்களாகவே இருக்கவும் முடியும்
~

நவம்பர் 24, 2006
KAYA