Wednesday, February 21, 2007

கொக்கக்கோலா, மெக் டொனால்ட்ஸ் மற்றும் கொலை


*
அன்று மாலை
மரியசாமி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்
அவரது பெயர் அப்பிடித்தானிருந்திருக்க முடியும்
ஏனெனில்
அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார் ஓர் நாயைப் போல
மேலும் அவரது மரணம் பரபரப்பூட்டுவதாயில்லை
அத்துடன் அவர் கறுப்பு நிறமாயிருந்தார்
பொறுக்கப்பட்ட உலர்ந்த இலைகள் நிரம்பிய பை
அவரருகில் சிதறியிருந்தது
அழுகிய கத்தரிக்காய் கருப்பு வாழைப்பழம் இத்தியாதி நிரம்பிய
மெக் டொனால்ட்ஸ் பையை இறுகப்பற்றியிருந்தது கை
அதினின்றும் சிதறியிருந்த மலிவுரக மிட்டாய்கள்
குருதியில் தோய்ந்திருந்தன
சுடும் தார் வீதியில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது
விதவிதமான சென்ட் போத்தல்களை சேகரித்து வைத்திருந்த
கருப்புக் குழந்தை பயந்தபடியே மூக்குச்சளியைப் பினைந்தது
கோக் போத்தில் ஒன்றினுள் வெண் திரவம் இருந்தது
-கசிப்பாம்- பேசிக்கொண்டார்கள்
சட்டைப் பையினுள்ளிருந்த தாள்களில் சிங்கள மணம்
வீசியதாம் - பேசிக்கொண்டார்கள்
* * *
அன்று மாலை
குளிர்பதனம் செய்யப்பட்ட எமது அறைகளின்
தூசு படியாத கதவுகளைத் சற்றே திறந்து
நியோன் விளக்குகள் மின்னத் தொடங்கிய
நகரத்தின் சாலையோரங்களில்
வெற்றுக் கோக் போத்தல்களை,மெக் டொனல்ட்ஸ் பைகளை
வீசி எறிந்தோம் நாம்
ஜன்னல்களையும் கதவுகளையும் அடித்து மூடினோம்
இரத்தக் கறைகளை காண்பதற்கு முன்பாக
* * * *
சிவப்பு வைன்
பீட்ஸாவின் சிவப்புத் தக்காளி டொப்பிங்
சிவப்புத் தக்காளிச் சோஸ்
உண்ணமுடியாமலிருப்பதைக் கண்டு
சிரிக்கத் தொடங்கிய நீ கூட
சிவப்பு இரத்தம் பெருகியோடிய
கொலையைப் பார்த்தாய் தானே?
நண்பர்கள் அகன்ற பின்
அதே கேள்வியை மீண்டும் கேட்டேன்
விரலால் உன் இமைகளைத் தீண்டிய படி
என் விரல் ஈரமுணர்ந்ததை நீ அறிந்ததும்
கண்ணைச் சிமிட்டி எழுந்து கொள்கிறாய்
இரு கோக் டின் களையும் ஒர் ப்ரிங்கிள்ஸ் டின்னையும்
எடுத்து வருகிறாய்
* * *
பாவனை முடிந்த பின் இவற்றை நாமாவது
வெளியில் எறியாமலிருப்போமாக
*


---ஹரிஹரஷர்மா
நன்றி: முரண்வெளி

2 கருத்துக்கள்:

')) said...

பிடித்திருக்கின்றது

')) said...

வருகைக்கு நன்றி பெயரிலி.

இக் கவிதையை யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மாணவர் எழுதியிருக்கிறார்.