Wednesday, March 14, 2007

வெளித் தோன்றும் மறுபாதியின் கதை

-அதீதன்-


நிறப்பிரிகை, கிரணம் போன்ற இதழ்கள் சமப்பாலுறவின் மீதான வழிமொழிதல்களை முன்வைத்ததன் பின் தமிழ்ச் சூழலின் எதிர்வினை எதுவாக இருக்கும் என அறிய நேரும் வாசகன் அச்சூழலின் சனாதனம் குறித்து அதிர்ச்சியடைய நேர்கிறது. கோட்பாடாக மாத்திரம் அற்முகமாகியதால் சமப்பாலுறவு வெளி குறித்த புரிதல்கள் தட்டையாக நிகழ்ந்திருக்கலாம் என்னும் புரிதலின் அடிப்படையில் தமிழக இலக்கிய-தத்துவப் புலத்தின் எதிர்வினையை உள்வாங்க முடிகிறது.
ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை ஷ்யாம் செல்வதுரையின் புனைவுகள் சமபாலுறவு வெளி மீது தேவையான கவனிப்பைச் செலுத்தியுள்ளன. சமப்பாலுறவாளர்கள் மீதான ஒடுக்குமுறை, அவ்வுறவு வெளியின் அரசியல் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த முனைந்த அவரது பிரதிகளுக்கு நமது எதிர்வினை எதுவாக இருந்தது?
83 இனக்கலவரத்தின் பின்னணியில் நிகழும் கதையினைக் கொண்ட ‘Funny Boy’ வெளிவந்து எத்தனை வருடங்கள்? ஷ்யாம் செல்வதுரை ஒரு தமிழர். ‘Funny Boy’இன் முக்கிய பாத்திரமான அர்ஜி செல்வரட்னம் ஒரு தமிழன். நாவலில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளும் அட்டூழியங்களும் சிறப்பாகச் சித்தரிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாவல் சர்வதேச ரீதியிலான கவனத்தையும் பெற்ற ஒன்று. நம் புகழ் பெற்ற வெளி ஒதுக்கல் கொள்கையின்படி இந்த நாவல் நிராகரிக்கப்பட எவ்வித நியாயங்களும் இல்லையே. ஏ.ஜே.கேயினால் எழுதப்பட்டு மு.பொவினால் மொழிபெயர்க்கப்பட்டு சரிநிகரில் பிரசுரமாயிருந்த சிறிய குறிப்பொன்றையும் யுகம் மாறும் தொகுப்பில் வெளிவந்த செல்வா கனகநாயகத்தின் ஆங்கிலக் கட்டுரையினையும் தவிர வேறெதையும் நான் கண்டதில்லை. எனவே, நாவல் கொண்டிருந்த சமப்பாலுறவுக் கையாள்கையே நமது ஒவ்வாமைக்குக் காரணம் என ஊகிக்க முடிகிறது.
மௌனம். மௌனம் மேலும் மௌனம். மௌனம் என்பது சாவுக்குச் சமம் என்கிறார் ஷோபா சக்தி. கொஞ்சமாவது உயிரைக் கையில் வைத்திருப்போரிடம் இருந்து காத்திரமான விவாதங்களை கோரி எழுதப்படுகிறது இக்கட்டுரை.

1
தெற்காசிய நவீனத்துவம் குரூரமான மரபுத்துண்டிப்பை நிகழ்த்திக்கொண்ட ஒன்றாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முனைந்தாலும், இந்திய/இந்துத்வப் பெருமரபிலிருந்தும் காலனித்துவம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட விக்டோரியச் சனாதன மதிப்பீடுகள் என்பவற்றிலிருந்து விடுபட்ட ஒன்றல்ல அது. சமப்பாலுறவு போன்ற கலகத்தன்மை மிக்க சமூகக்கூறுகளை தனது உடைக்கவியலா மௌனத்தின் மூலம் இருட்டடித்த பெருமை அதற்குரியது. சிறுமரபுகளை மீட்புருவாக்கம் செய்தலும், சொல்லப்பட்ட வரலாற்றின் மீதான கட்டுடைப்பும் மாயா-எதார்த்தவாதத்தின் வருகையினையொட்டி நிகழ்ந்தனவேயாயினும் தெற்காசியக் கலாச்சார மனம் தனக்கு உவப்பான சிறுமரபுகளை மாத்திரம் தேர்ந்தெடுத்துப் புனைந்து கொண்டது. ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை, போன்ற பெருங்கதையாடல்களில் புதைந்துள்ள சமப்பாலுறவுக் கூறுகளையோ, சமப்பாலுறவுக்கென ஓர் அத்தியாயத்தையே ஒதுக்கிய வாத்ஸ்யாயனரையோ யாரும் கண்டுகொள்வதில்லை.
மத்திய காலத் தெற்காசியாவில் எழுதப்பட்ட பாபர் சக்கரவர்த்தியின் சுயசரிதையான Tuzuki – I – bari பதின்ம வயதுச் சிறுவனின் மீது சக்கரவர்த்தி கொண்டிருந்த மனோரதியக்காதலைச் சித்தரிக்கிறது. இதெல்லாம் மறைக்கப்பட்ட வரலாறு.
இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஒஸ்கார் வைல்ட் பிரச்சனை தீர்த்துவைக்கப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே-1942இல்-உருது நாவலாசிரியையான இஸ்மத் சுகாட்டாயின் Lihaf ( The Quilt ) நாவல் வெளியாகிறது. எஜமானிக்கும் வேலைக்காரிக்கும் இடையிலான பெண்சமப்பாலுறவு நாவலில் கையாளப்பட்டிருந்ததால் சுகாட்டாய் மீது வழக்குத் தொடரப்பட்டது. முப்பதுகளில் நடந்து முடிந்திருந்த Lady Chatterley's Lover - D.H.Lawrence, Ulysess - James Joyce வழக்குகளின் தீர்ப்புகள் நிகழ்த்திய தாக்கமோ என்னவோ நீதிமன்றம் மிக முற்போக்கான தீர்ப்பை வழங்கி சுகாட்டாயை விடுவித்தது.
நீண்ட கால மௌனத்தைக் கிழித்துக் கொண்டு வெளிவந்த கமலாதாஸின் My Story பதின்மப் பருவப் பெண்சமப்பாலுறவைக் காட்டியது. இளம் ஆசிரியை மீது தனக்கு ஏற்பட்ட சபலத்தையும் கமலாதாஸ் அதில் பதிவு செய்திருந்தார்.
வெகுசனப் பண்பாட்டுத் தளத்தில் சமப்பாலுறவு பற்றிய கதையாடல்கள் ஆரோக்கியமாய் இருந்து ஞாபகமில்லை (இந்தியா டுடே ஓரளவு விதிவிலக்கு). மிக மலிவு ரக நாவலான Strange Obsession (Shopa De 1993), அதன் பெண்சமப்பாலுறவுச் சித்தரிப்புகளால் பெற்ற சந்தை வரவேற்பும் இதைத் தொடர்ந்து வெகுசன ஊடகங்களில் நடந்த உற்சாகமான சர்ச்சைகளும் தனித்த சமூகவியல் ஆய்வுக்குரியவை.
80களின் நடுப்பகுதியிலிருந்தே காத்திரமான விவாதங்கள் எழுகின்றன. பெரிதும் புலம்பெயர் இலக்கியவாதிகளிடமிருந்தே இவை எழுந்தன. அவர்களது புலம்பெயர் வாழ் சூழலும் அதன் சுதந்திரத்தன்மையும் இதற்கான காரணங்களாயமையலாம்.
(சமப்பாலுறவு பற்றிய கதையாடல் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப் படுவதையும் அது எதிர்கொள்ளும் சிக்கல்களையும் மனங்கொள்ள முடிந்தாலும் சமூகப் பொருத்தப்பாடு கருதி தெற்காசிய எழுத்தாளர்களது பிரச்சனைகளே இங்கு ஆராயப்படுகிறது)
மிகக்குறைந்தளவிலான எழுத்தாளர்களே சமப்பாலுறவாளர்களின் சுயத்துக்கும் அடையாளத்துக்கும் இடையிலான மோதுகை, சுயத்தைக் கட்டமைத்த இனத்துவ, காலனிய, பின்காலனியக் கதையாடல்கள், இந்தியப் பெருங்கதையாடலில் சிக்குண்ட உடல் என எழுத முன்வருகிறார்கள். ப்ராவுல்லா மோஹந்தி(Prafulla Mohanti), அகா ஷாகிட் அலி(Aga Shahid Ali), அன்ட்ரியூ ஹார்வீ(Andrew Harvey), சுனிட்டி நம்ஜோஷி(Suniti Namjoshi), விக்ரம் சேத்(Vikram Seth), ஷ்யாம் செல்வதுரை போன்றோரை இவ்வாறு அடையாளப்படுத்த முடியும்.
இலங்கையில் பெரிதும் அறியப்பட்ட விக்ரம் சேத் தனது புனைவுகளில் பாலியல் ரீதியான சுயத்துடன் முரண்பட முடியாது என்பதை ஆழமாக வலியுறுத்தும் ஒருவர். சுய அடையாள ஏற்பினையும் குற்றவுணர்வு நீக்கத்தையும் பேசுவன விக்ரம் சேத் பிரதிகள்.
நாக்பூரில் பிறந்து பழைய டெல்லியில் வளர்ந்து பதின்ம வயதுகளில் புலம்பெயர்ந்த அன்ட்ரியூ ஹார்வியின் One Last Mirror, Burning House போன்ற நாவல்கள் மிக வெளிப்படையான மொழியிலமைந்தவை. ப்ராவுல்லா மோஹந்தியின் தற்புனைவான ‘Through Brown Eyes’ இனவாத வன்முறை பெருகும் ஐரோப்பியச் சூழலில் சமப்பாலுறவினை ஆராய்கிறது.
சுனிட்டி நம்ஜோஷியின் Feminist Fables தொன்மப்பிரதிகளையும் தேவதைக் கதைகளையும் பெண்ணிய-சமப்பாலுறவு நோக்கில் மறுவாசிப்புச் செய்கிறது. இவரது புனைவுகளும் (எ.கா - Conversation of a cow) சமப்பாலுறவினை எழுதி வெளித்தெரிய வைக்கும் முயற்சிகளே.
தீவிர பெண்ணியலாளரும் பெண்ணிய அரசியலாக்கம் குறித்து தொடர்ந்து பேசி வருபவருமான சுனிட்டி நம்ஜோஷியும் ஷ்யாம் செல்வதுரையும் மாத்திரமே தமது சம்ப்பாலுறவு அடையாளம் குறித்து வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள். மற்றையோர் தீவிர கவனத்துடன் த்மது அடையாளத்தினை மறைத்துக் கொள்வதை எவ்வாறு எடுத்துக் கொள்வது?
இந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் பெரும் பாழ்வெளியை எழுதிக் கடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. Christopher Isherwood, Truman Capote, Gore Vidal போன்றோருடன் தொடங்கி Allan Hollinghurst, David Sedaris என நகரும் அமெரிக்க ஐரோப்பிய சமப்பாலுறவு எழுத்தே பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறது. எ.கா – ஆலன் ஹோலிங்ஹர்ஸ்ட்டின் On the line of beauty புக்கர் பெற்ற போது எழுந்த சர்ச்சை. சமப்பாலுறவை வாழ்விலும் கலையிலும் கொண்டுவந்த பாஸ்பின்டெரின் ஜேர்மனில் கூட Homophobia அகன்றபாடில்லை. ஆளானப்பட்ட அமெரிக்காவின் ஒஸ்கார் கூட அங் லீயின் Broke back Mountainஇற்கும் ஸ்டீபன் டால்டிரையின் The Hours இற்கும் என்ன செய்தது? ( இவ்விடத்தில் Broke back Mountainஇனை Bareback Mounting என conservatives சினிக்கலாக எழுதியது ஞாபகம் வருகிறது).

2
சமப்பாலுறவு வெளி பற்றிய கதையாடல்கள் 90களின் பின் தமிழில் அரும்புகின்றன. இது குறிது எழுதியோராக – நானறிந்தவரை – ஜெயமோகன், சாரு நிவேதிதா, பிரேம்-ரமேஷ், மாலதி மைத்ரி, லஷ்மி மணிவண்ணன், ஷோபா சக்தி, திசேரா ஆகியோரைக் குறிப்பிட முடியும்.
ஜெயமோகனதும் (விஷ்ணுபுரம் நாவலின் குறித்த சில பகுதிகள்) சாரு நிவேதிதாவினதும் பிரதிகள் சமப்பாலுறவு மீதான குற்றவுணர்வையும் அருவருப்பையும் ஏற்படுத்தியபடி – ஆனால் கலகம் செய்யும் பாவனையில் எழுதப்பட்ட பிரதிகள் அவை.
லஷ்மி மணிவண்ணனது கவிதைகள் சிலவற்றில் சமப்பாலுறவு குறித்த விவரணைகளைக் காண முடியும் (சங்கரின் தொடுதலில்/எழுந்து நெளிகிறது/ சங்கருக்குக் கதவற்ற / எனது வீடு). பிரேம்-ரமேஷ், யவனிகா ஸ்ரீராம் ஆகியோரது கவிதைகள் குற்றவுணர்வேதுமற்று சமப்பாலுறவை ஆராதிப்பவை. இணையின் பால் சுட்டப்படாது எழுதப்பட்ட கவிதைகளை சமப்பாலுறவு நிலை நோக்கிலான வாசிப்பில் கொண்டாட்டங்களென எதிர்கொள்ள முடியும். மாலதி மைத்ரி தனது கட்டுரையில் (செம்புலப்பெயல் நீர்) சமப்பாலுறவுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்கிறார்.
ஷோபா சக்தியின் சிறுகதைகள் சிலவற்றில் சமப்பாலுறவு சித்தரிக்கப் படுகிறது. தேசத்துரோகி தொகுப்பில் உள்ள ‘காய்தல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. (அவரது கதை சொல் முறையின் பெருந் தோல்வி அக்கதையே என்பது வருந்தத் தக்கது).
திசேராவினுடைய சிறுகதை (‘கண்ணியத்தின் காவலர்கள்' – வெள்ளைத் தோல் வீரர்கள் தொகுப்பில் உள்ளது) சமப்பாலுறவாளர்களை அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தும் இந்துத்துவ மரபு தன்னை moral police ஆக வடிவமைத்துக் கொள்வதை parody செய்கிறது. ஆனால் வெறும் மோஸ்தர் விவகாரமாகவும் அரசியல் ஆழநுணுக்கமற்ற எதிர்ப்பிலக்கியப் போலியாகவும் அக்கதை எஞ்சி விடுகிறது.
தமிழில் சமப்பாலுறவு வெளி குறித்து இதுவரை எழுதப் பட்டவற்றில் சிறந்த பிரதிகளென பிரேம்-ரமேஷினுடைய பிரதிகளைக் குறிப்பிட முடியும். : பெண்சமப்பாலுறவு பற்றிய பிரேம்-ரமேஷின் கதையான ‘அங்கும் இங்கும் உடல்கள், இங்கும் அங்கும் கதைகள், கலாச்சாரத்தின் வழி சமைந்த மூன்றாமுலகப் பெண் மனமும் உடல்ச்சலனங்களும் தீராது தமக்குள்ளேயே நிகழ்த்தியவாறிருக்கும் மோதுகைகளைப் பரிசீலிக்கிறது.
ஆண்சமப்பாலுறவு வெளியினுள் நிகழும் ஆண்டான்-அடிமைத் தர்க்கம் , சமப்பாலுறவாளர்களின் மனச்சிக்கல்களை ஆராய்ந்து முன்வைக்கும் ‘மனவெளி நாடகம் சிறுகதை கவித்துவமான புனைவு முயற்சி.

உள்ளிணைப்பு:
ஷ்யாம் செல்வதுரையின் புனைவுகள்
ராஜீவ விஜேஸின்கவின் 'Days of Despair' உம் சரி ரொமேஷ் குணசேகரவின் 'Reef'உம் சரி சமப்பாலுறவைச் சித்தரித்தாலும் அவற்றின் கதைகள் சமப்பாலுறவை மையங்கொண்டமையவில்லை. ஆங்கிலத்தில் எழுதும் இலங்கை எழுத்தாளர்களில் ஷ்யாம் செல்வதுரையே சமப்பாலுறவை மையப்படுத்திய நாவலை எழுதியவர். Funny Boy இல் கதை சொல்லி தனது 'வித்தியாசத்தை' உணர்ந்த படி வளர நேர்கிறது.
Lambda, W.H.Smith First Novel Award போன்ற பல சர்வதேச விருதுகளை வென்ற ஷ்யாம் செல்வதுரை தனது Funny Boy நாவலை சுயசரிதைத் தனம் மிக்கதென ஏற்றுக் கொள்கிறார். அந்தளவிலேயே மனத்தடைகள் ஏதுமற்ற ஒருவராக அவர் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.
சிங்கள-தமிழ் கலப்புத் தம்பதிகளின் புதல்வனான ஷ்யாம செல்வதுரை தற்போது கனடாவில் அவரது துணைவருடன் வசித்து வருகிறார். சுவாரசியமான கதைசொல்லியான இவரது மூன்று நாவல்கள் இதுவரை வெளியாகியுள்ளன (Funny Boy, Cinnamon Gardens, Swimming in the monsoon sea).
குற்ற உணர்வற்ற பாவ ஒப்புதல்த் தொனியில் எழுதப்பட்ட கதையைக் கொண்டது Funny Boy. அர்ஜி செல்வரத்னத்தின் பதின்ம வயதுகளைச் சொல்கிறது நாவல்: அர்ஜி பெண் தன்மை மிக்கவனாகவும் பெண்போன்மை நிலைக்கான உந்துதல் உடையவனாகவும் (effeminate tendencies) இருப்பதால் ‘Funny’ என்ற அடைமொழி கொண்டழைக்கப் படுகிறான். தோழமையற்ற வளர்சூழலும் அதிகரிக்கும் இனவன்முறைப் பின்னணியும் சேர்ந்த கதைக்களனில் அர்ஜியின் பாடுகள் எழுதப்படுகின்றன.
ஆறு தனித் தனியான கதைகளாகவும் ஒன்றுசேர்த்து வாசிக்கையில் திருப்திகரமான நாவலாகவும் இருக்கும் வண்ணம் கட்டமைக்கப் பட்ட பிரதி ஓர் வெற்றிகரமான Bildungsroman ஆகத் தன்னை நிறுவிக் கொள்கிறது.
அர்ஜியின் பொழுதுகள்: கொடுங்கனவினுள் மலர்தல்
அர்ஜியின் உறவினர்கள் ஒன்றுகூடும் ஞாயிற்றுக்கிழமையொன்றின் சம்பவங்களுடன் தொடங்குகிறது நாவல். அர்ஜியின் மாமா, மாமிகள் அவர்களின் பிள்ளைகள் என அனைவரும் ஒன்றுகூடும் அந்த ஞாயிற்றுக்கிழமைகள் அர்ஜியின் முரண்பாடுகளை வெளித்தெரிய வைக்கும் களங்களாக அமைந்து விடுகின்றன.
சிறுமிகள் கொல்லைப் புறத்தில் தனியாகவும், சிறுவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேறோரிடத்திலும் விளையாடுவது வழக்கமாயிருக்கிறது. அர்ஜி தான் பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட விரும்பியதாகக் கூறுகிறான். அர்ஜி இயல்பாகவே கற்பனைத் திறன் மிக்க அழகியல் உணர்வுகளுடைய ஒருவன். ஆண் சிறுவர்களுடைய விளையாட்டுக்கள் மீற முடியாத விதிகளால் அமைந்து வறண்டு போயிருப்பதால், கற்பனைச் சுதந்திரத்தைக் கொண்டாடும் தேவதைக் கதைகளது ‘போலச் செய்தல்கள்' அவனை ஈர்க்கின்றன. அர்ஜியினது கற்பனைத் திறன் அப் போலச் செய்தல்களில் புதிய திருப்பங்களைக் கொண்டுவர சுவாரசியமான முடிச்சுக்களை ஏற்படுத்த உதவுகிறது. ஆண் சிறுவர்களது வெளியில் இகழ்ச்சியை எதிர்கொள்ளும் அவனுக்கு பெரிய அங்கீகாரத்தை சிறுமிகள் வழங்குகின்றனர்.
அர்ஜியினது ‘வினோதங்கள்' வெளித்தெரியத் தொடங்குகையில் அவன் மூச்சு விடுவதற்கென்று இருந்த ஒரேயொரு வெளியும் அச்சுறுத்தலுக்குள்ளாகிறது. சேலை உடுத்துதல், நகைகள் அணிந்து அழகு பார்த்தல் போன்றவற்றின் மீது அர்ஜிக்கு இருந்த விருப்பங்கள் மிகக் கடூரமாக எதிர்கொள்ளப் படுகின்றன.
அர்ஜியின் சிறுபிள்ளைத் தனமும் அப்பாவித்தனமும் மகிழ்ச்சியும் மெல்ல மெல்ல அற்றுப் போவதை ஓர் மெல்லிய மலரின் இதழ்கள் சருகாகி உதிர்வதையொத்த துயரத்தொனியுடன் எழுதுகிறார் ஷ்யாம் செல்வதுரை.அர்ஜியின் செயல்பாடுகளனைத்தும் கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காகின்றன. தன் மீதான வன்முறையை அர்ஜி நினைவு கூர்ந்து பதிவு செய்யும் இடங்கள் கவித்துவ பயங்கரமும் சோகமும் நிரம்பியவை: "As I looked at her, I could almost hear the singing of the cane which would be followed by the searing pain." "Soon I would have to turn around and go back to my parent’s house, where Amaachchi awaited me with her thinnest cane, the one that left deep impressions on the backs of our thighs, so deep that sometimes they had to be treated with Gentian Violet. The thought of the cane as it cut through the air, humming like a mosquito made me wince even now, so far from it".

நேரடியான உடல் ரீதியான வன்முறை பற்றிய பதிவுகளை விடவும் உளவியல் ரீதியாக அர்ஜி பலவீனப் படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அனேகம். சிறில் மாமா "Ey Chelva, Looks like you have a funny one here" (அர்ஜியைப் பற்றி) என்று கூறுமிடம், அர்ஜியின் தாய் நளினி ‘because the sky is so high and the pigs can’t fly’ கூறுமிடமும் அழித்தகற்றவியலாப் புறக்கணிப்பின் மிகைச்சித்திரத்தை* அர்ஜியில் வரைவதை காட்டுகிறார் ஷ்யாம் செல்வதுரை.
நம் கலாச்சாரம் அங்கீகரித்தவாறேயிருக்கும் வன்முறைகளின் மீதான மீள்பார்வையை கோரி நிற்கும் சித்தரிப்புகள் நாவல் நெடுகிலும் வந்து போகின்றன. மேலே கூறப்பட்டவற்றுக்கு மேலாக நாவலில் வரும் விக்டோரியா அக்கடமி அதிபரான ‘பிளக் ரை' நம் கலாச்சாரம் அங்கீகரிக்கும் வன்முறையின் இன்னோர் குரூர முகம். அர்ஜியின் முன் வன்முறையும் சவால்களும் வரிந்து கட்டிக் கொண்டு நின்றாலும் அவன் சமரசம் பண்ணிக் கொள்வதில்லை. அவன் தன்னை தொடர்ந்து வலியுறுத்துபனாக இருக்கிறான். வன்முறையை அதன் அறத்தை தனியோர் ஆளாய் எதிர்க்கும் ஒருவன் அவன். நாவலின் பிற பாத்திரங்கள் வன்முறையுடன் சமரசம் செய்து கொள்பவர்களே: இனவேறுபாடு காரணமாக ராதா அத்தை அனிலுடனான தனது உறவைத் துண்டித்துக் கொள்கிறாள், நளினி தனது முன்னாள் காதலனான டாரியை விடுவிப்பதற்கான முயற்சியைக் கைவிடுகிறாள். அர்ஜியின் தந்தை செல்வரத்னம் இன்னோர் உதாரணம்: அழுத்தங்களுக்குப் பயந்து வீட்டில் தங்கியிருந்த ஜெகனைக் கைகழுவி விடுகிறார். அர்ஜி மாத்திரமே வன்முறையை அலட்சியப்படுத்துவதினூடு தன்னை வலியுறுத்துபனாக இருக்கிறான்.
அர்ஜியின் தந்தை அவனது பெண்தன்மையைக் களையவென ஆண்கள் பாடசாலையான விக்டோரியா அக்கடமிக்கு அவனை அனுப்புகிறார். பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடாதிருக்கும் படி அர்ஜி எச்சரிக்கப்படுகிறான். கிரிக்கெட்டினுள் பலவந்தமாகத் தள்ளப் படுகிறான். ஆனால் அனைத்து அழுத்தங்களுக்கும் நேர்மாறாக விக்டோரியா அக்கடமியில் முழுமையான சமப்பாலுறவாளனாக அவன் பரிணமிக்கிறான். விக்டோரியா அக்கடமியில் ஷேகனுக்கும் அர்ஜிக்கும் இடையே இடம்பெறும் நெருக்கமும் உறவின் தருணங்களும் ஒரே சமயத்தில் கிளர்வையும் துக்கத்தையும் வலியையும் ஏற்படுத்தும் வலிமை மிக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன.
இவ்வாறாக நாவலில் பதிவுறும் அர்ஜியின் பதின்ம வயது வரலாறு பல முக்கிய உண்மைகளைக் கவனப் படுத்துகிறது. அர்ஜி சமப்பாலுறவாளனானது அவனை மீறிய சூழ்நிலைகளில் என்பது மீளமீள வலியுறுத்தப் படுகிறது. இது ஏற்கனவே உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்ட போதும் homophobic சூழலில் புரிந்துணர்வை ஏற்படுத்தவல்ல அன்பான கடிதம் போலிருக்கிறது நாவலின் சமூக முக்கியத்துவம்.
Funny Boyக்கு அடுத்து வெளிவந்த Cinnamon Gardens 1920களில் நடக்கும் கதையைக் கொண்டது. தனது சுய அடையாளத்தை வலியுறுத்தவோ ஏற்கவோ முடியாது திணறும் பாலேந்திரன் மீதான விமர்சனமாக, இலங்கையின் ஆதிக்க சாதியினரின் போலிமதிப்பிடுகளையும் hypocrisyயையும் ஆவணப்படுத்தும் பதிவாகவும் நாவல் அமைகிறது.
மூன்றாவது நாவலான Swimming in the monsoon sea மேலைக்கண்ணைத் திருப்திப் படுத்தும் புனைகதையாளராக ஷ்யாம் செல்வதுரையைக் காட்டுகிறது. ஆபத்தான Pop Literature போக்கினுள் ஷ்யாம் இழுக்கப்படுவதை இது குறித்து நிற்கிறதோ என்று ஐயுறுமளவுக்கு நாவலின் தரம் வீழ்ந்திருக்கிறது. Young Adultsக்கான புனைவு என்றே இது விளம்பரப் படுத்தப் படுகிறது. ஆனாலும் இலங்கையின் எதிர்-சமப்பாலுறவு நிலைப்பாட்டை சித்தரிக்கத் தவறவில்லை நாவல்.
*
எனது புழங்கு வெளியெங்கும் பல அர்ஜிக்களை நான் சந்தித்துக் கொண்டேயிருக்கிறேன். தனித் தனியான பெயர்கள் அவர்களுக்கிருந்தாலும் ‘பொன்ட்ஸ்' என்கிற பொதுப்பெயரால் அவர்கள் அடையாளப்படுத்தப் படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். நானும் தான் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்: நாணிக்கோணியபடி அவர்கள் திருமணம் செய்து கொள்வதை – பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை – வேலை அது இதென்று திரிவதை – உள்ளே அலைந்துலைந்து செத்துப் போவதை-அவர்களை அவர்கள் எழுதுவதாயில்லை.
இதையெல்லாம் பார்த்துவிட்டு ‘குரலற்றவர்களின் குரலாயிருக்கிறோம்' என்று யாராவது பேனையைத் தூக்கி விடுவார்களோ என்றுதான் அஞ்சுகிறேன். அருந்ததி ரோய் கூறுவது போல ‘They are not voiceless. They are deliberately silenced or their voices are preferably unheard’.
குரலற்றவர்களின் குரலாயிருக்கிறோம் என்பதன் வன்முறையைப் புரிந்து கொண்டு நாம் இதன் மீது எழுப்பும் ஆரோக்கியமான விவாதங்கள் மாத்திரமே சூழலின் இறுக்கத்தை தளர்த்தி சமூக இயங்கு தளங்களை சமப்பாலுறவாளர்களின் செயற்பாடுகளுக்கென திறந்து விடும் வல்லமையுள்ளவை.
குறிப்புகள்:
* - சல்மாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்
1 – மேலும் வாசித்தறிய - * Same Sex Love In India: Readings from History and Literature – Saleem Kidwai, Ruth Vanita
* Facing the mirror: Lesbian Writings From India – Aswini Sukthankar – Penguin India
2 – Funny Boy – Novel by Shyam Selvadurai – Penguins India


பொதுவாக இலங்கை ஆங்கில இலக்கியம் பற்றி தமிழில் கதையாடப் படுவது குறைவு. நம் கவனிப்புக்குரிய பல பிரதிகள் அவர்களிடமிருந்து உருவாகியிருக்கின்றன. ராஜீவ விஜேசின்கவின் Acts Of Faith 83 கலவரத்தைப் பற்றிப் பேசுகிற்து , இந்தியத் தலையீட்டைப் பேசும் அவரது மற்றொரு நாவல் Days Of Despair. ஜீன் அரசநாயகம் ஏற்கனவே கவனப்படுத்தப்பட்டுள்ளார் எனினும் அவர் குறித்துப் பெரிதாகப் பேசப்பட்டதில்லை. இந்த நிலமையே ஷ்யாம் செல்வதுரை கவனிப்புப் பெறாததற்கு காரணமாயிருக்கலாம். இக்கட்டுரையின் நோக்கம் இனப்பிரச்சனை பற்றிய ஒன்றல்ல. மேலும் இலங்கயின் எல்லைக்குள் இந்த நாவலுக்கு அர்த்தம் கற்பிக்கவும் நான் விரும்பவில்லை. ஆனால் பேசப்படாதவை பற்றிய பிரக்ஞையை தூண்டும் ஒரு குறிப்பாக இது அமையட்டும். Funny boy -இல் இடம்பெற்ற காலக் குளறுபடி குறித்து ஏற்கனவே பேசப்பட்டுள்ளது (செல்வா கனகநாயகம் கட்டுரை). ஆனால் பிற விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை.
அர்ஜியின் வளர்ச்சிக்காலப் பின்னணியாக இனவன்முறை சித்தரிக்கப்படுகிறது. நாவலின் இந்த அம்சம் தனியான விவாததுக்குள்ளாக்கப் படவேண்டிய ஒன்று. நாவலினிறுதி அத்தியாயமான ‘The Riot Journal: An Epilogue’ இனை மொழிபெயர்க்கும் யோசனை கூட எனக்கிருந்தது.
நாவல் 83 கலவரத்தை ஓர் தனித்த நிகழ்வாகக் காட்ட முயற்சி செய்யவில்லை. நாட்டில் 83க்கு முன்னும் பின்னும் நிலவிய நிலவிக்கொண்டிருக்கிற பெருவன்முறையின் வெளித்தெரிந்த வெடிப்பாக அது சித்தரிக்கப்படுகிறது. இனக்கலவரங்களின் போது பெரும்பாலான சேதத்தை விளைவித்தது சந்தர்ப்பவாத வன்முறையே என்கிறது நாவல். (எ.கா- பண்டுரத்னே முதலாளியின் மகன்களும் நண்பர்களும் ‘Death to all tamil pariahs’ என செல்வரத்தினத்தின் கடை ஜன்னல்களில் எழுதுவது.)
விக்டோரியா அக்கடமியில் சல்கொடோ தமிழ் மாணவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகள் பற்றிய விவரணைகளை சிறு பிள்ளைகளுடையதுதானேயெனப் புறமொதுக்கி விட முடியாது.
ஷ்யாம் செல்வதுரை இனங்களுக்கிடையிலான முறுகல்நிலை தலமைகளாலேயே தோற்றுவிக்கப்படுகிறது என்ற கருத்துடையவர் என்பதை அவரது Time (August 25 2003) கட்டுரை உறுதி செய்கிறது. நாவலிலும் இந்தப் பார்வை கணிசமான அளவு வலியுறுத்தப்படுகிறது. சிங்களவனான சல்கொடோவின் தொல்லைகளிலிருந்து அர்ஜியைப் பாதுகாப்பதும் சிங்களவனான ஷேகன் தான். சூழல் சார்ந்த வாசிப்பில் இவை பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. நான் முன்னரே குறிப்பிட்டது போல நாவலின் இனமுறுகல்க் கையாள்கை தனியான விவாததுக்கு எடுத்துக்கொள்ளப் படவேண்டிய ஒன்று.


இரவு வீடு - அதீதன் கவிதை

நாளைடைவில்
இந்த இரவு ஒரு வீடானதும்
அதில் வசிப்பவர்களாக
நாமிருந்து தானே தீரவேண்டும்

நமக்கான கனவுகள்
ஒரு மேஜையொன்றில் பரிமாறப்பட்டிருக்கலாம்
என் நண்பனே
கனவினை நாம் தின்னத் தொடங்குகையில்
பயத்தின் நொடி வீசுவதாக
தயவு செய்து கூறாதிருப்பாயாக
அவ்வாறு கூறுவாயாகில்
வீட்டிற்கு கதவுகள் இல்லாதிருப்பதை
வெகு சீக்கிரமாகவே உணர நேரிடும்

அவ்வீட்டின் எந்த மூலையில்
நீ உன்னைப் புணருவாய்
என் நண்பனே
இல்லாதிருப்பதாய் நாம் நினைக்கும் குறி
தன்னை உணர்த்தும் தருணத்தில்
நம் வீட்டில் ஜன்னல்கள் இல்லாதிருப்பதை
உணர்வோம்
மனவாதையின் உடல் நீட்சியெனத்
துடிக்கும் உன் குறியின் ஸ்கலிதம் விழுங்கித்
தணியும் என் தாபத்தின் தொடக்கத்தில்
எழுந்து நெலியும் சர்ப்பம் தீண்டிய
இரவின் சுவர்கள் நீலமாகப்
பெயர்த்துத் தின்னலாம் சுவர்க் காறைகளை

விழிப்பின் தருணத்தில் காய்ந்த ஸ்கலித்த்தை
தொடைகளில் உணர்ந்து
குளியலறைக்குச் செல்கையில்
உடலில் ஒட்டியிருக்கும்
இரவின் ஸ்கலிதத்தை நாம் உணர்வதில்லை
புன்னகைத்தபடி
கதவுகளைத் திறந்து வெளிவருகிறோம்
பல்லிடுக்குகளில் இருளாய் ஒளிர்கிறது
இரவின் ஸ்கலிதம்

என்ன செய்யலாம் எனது நண்பனே
நமக்குத் தெரியாமலே நம்மைப் புணர்த்தி விலகும்
வசீகரமிக்க இரவின் குறியை

(

2 கருத்துக்கள்:

')) said...

நீண்டகட்டுரையாக இருக்கிறது. நேரமொதுக்கி வாசித்துச் சொல்கிறேன்.

')) said...

நன்றி மிதக்கும் வெளி